
விழிகள் வழிந்திட,
காணும் வழிகளை மடை மறைத்திட,
இமைகள் திறந்தும் குவிந்து கிடக்கும் இருள்;
சிரித்து சிரித்து கன்னங்கள் கறுத்ததால்,
விழிகள் துரத்தும் வாசல் நீர்;
விரல்கள் கோலமிட்டால்,
விழிநீர் விடைபெறும்;
விஞ்சிக்கிடக்கும் சோகம்?


எழுந்துவிட்ட அதிகாலை,
எழுப்பிவிட்ட கடிகாரம்,
காத்திருக்கும் கடமை,
இன்னும் உறங்கும் நண்பன்,
சர்க்கரை அதிகமாய் என்றுகேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்தின் கடைத்தேநீர்,
இயந்திரம் தந்த இதமான வெந்நீர்,
விரும்பிய இசைபாடும் குறுவட்டு,
சுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்,
இரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை,
எனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள்,
இத்தனை இருந்தும் ஏதோ இழப்பதாய் உணர்வு,
இரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன்,
நாளைய காலையின் விழிப்பிலாவது
தாயின் , “மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாரு” எனும் குரல் கேட்காதா
என்ற எதிர்பார்ப்போடு…..
இங்ஙனம்,
பாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்,
மென்பொருள் வல்லுனன்.